நடராஜன் மீதான வெளிநாட்டு கார் இறக்குமதி முறைகேடு வழக்கு: பிப்.27 ல் இறுதி விசாரணை

chennai, foreign car, natarajan, sasikala, tamil nadu
சென்னை: சசிகலா கணவர் நடராஜன் மீதான வெளிநாட்டு கார் இறக்குமதி முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை பிப்.,27 ல் துவங்குகிறது.நடராஜன், லண்டனில் இருந்து, ‛லெக்சஸ்’ என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 1994ல் வெளியான புதிய ரக கார் தான் அது என, தெரிய வந்தது. வரி ஏய்ப்பு மூலம், 1.06 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, நடராஜன், அவரது உறவினர் வி.என்.பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன் தொழில் அதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கியின், சென்னை அபிராமபுரம் கிளை மேலாளர் சுசரிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இரண்டு ஆண்டு சிறை தண்டனை :

இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. தொழில் அதிபர் பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். அதனால், நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நான்கு பேருக்கும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2010ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்டனையை நிறுத்தி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, கார் இறக்குமதி தொடர்பாக, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மத்திய அமலாக்க துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, நடராஜன் உள்ளிட்ட, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 2016 டிச.., 22ல் உத்தரவிட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்.27 ல் துவங்குகிறது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top