பேரவையின் நடவடிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க.வினர் வந்தார்கள்: சபாநாயகர் தனபால் கண்டனம்
act, chennai, dhanapal, dmk, state assembly election, strike, tamil nadu February 20, 2017,
சென்னை, சட்டபேரவையின் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்திலே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள், அவைக்கு குந்தகம் விளைவித்து விட்டு சென்றார்கள் என்று நேற்று சட்டசபையில் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் 122 உறுப்பினர்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது.
வெட்கப்படுகிறேன்:
இதனை அறிவித்து சபாநாயகர் தனபால் பேசியதாவது:
அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஆதரித்தோர் அதிகமாக இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீர்மானம் நிறைவேறியது, வெற்றி பெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீர்மானம் வெற்றி பெற்றது என பேரவைக்கு அறிவிக்கின்றேன். அம்மாவின் அரசு தொடர்ந்து சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காலையிலே நடைபெற்ற சம்பவங்களை நான் மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை என்றாலும், பாரம்பரியமிக்க இந்த சட்டமன்றப் பேரவையில் அதுகுறித்து எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பாவிட்டாலும், நான் அதை மறந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்திலே ‘நான் நீலிக் கண்ணீர் வடித்ததாக’, வெளியிலே பேட்டி கொடுத்ததால், எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேட்டி கொடுத்திருக்கிற காரணத்தினாலே, எனது மனது மிகவும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் ஒரு சிலவற்றை மட்டும் வேதனையுடன் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக வெட்கப்படுகிறேன்.
திட்டமிட்ட நாடகம்:
மிக, மிக தாழ்த்தப்பட்ட, சாமானிய எளிய குடும்பத்தில் பிறந்த என்னை, பள்ளத்திலிருந்து கைகொடுத்துத் தூக்கிவிடுகிற, ஜெயலலிதா ஆட்சியிலே இந்த பதவியிலே தொடர்ந்து 2-வது முறையாக அமர்த்தப்பட்டேன். சுதந்திர இந்தியாவிலே ஒரு தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இந்த எளியவனை மிக உயர்ந்த இந்த பதவியிலே அமர்த்தி நான் சார்ந்துள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவ்வாறு எளிய சமூகத்திலிருந்து வந்த நான் அவை விதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் மரபுகளைப் பின்பற்றி இந்தப் பேரவையை நடத்திய காரணத்தினால்தான் மீண்டும் இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் இங்கே தி.மு.க. உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையிலே என்மீது தாக்குதல்களை நடத்தியிருந்தால்கூட நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன். பேரவைத் தலைவர் என்ற முறையிலே நான் பணியாற்றுகையில் அந்தப் பதவிக்கும் மரியாதை தராமல் நான் சார்ந்துள்ள சமூகத்தை இழிவுபடுத்துகின்ற முறையில் இங்கே நடந்துகொண்டது அவர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய ஒரு நாடகமாகவே நான் கருதுகிறேன்.
தனிமனிதனாக எதிர்க்கிறேன்:
ஒடுக்கப்பட்ட சமூகத்தை, ஆதி திராவிட, தாழ்த்தப்பட்ட இன மக்களை அடக்கிவிடலாம். இந்த சமூகம் வளரக் கூடாது என நினைத்து தி.மு.கவினர் இங்கே செயல்பட்டிருப் பார்களேயானால், உண்மையிலேயே நான் சார்ந்துள்ள சமூகத்தின் சார்பாக தனபால் என்ற தனி மனிதன் அதனை என்றென்றும் எதிர்க்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதற்காகத்தான் இப்போது என்னுடைய மனவருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் ஆனபின்பும் இந்தச் சமூகம் முன்னுக்கு வரக்கூடாது, இந்தச் சமுதாயத்தைச் சார்ந்த எவரும் உயர் பதவியில் இருக்கக்கூடாது என்ற எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடே இங்கே நடைபெற்ற குழப்பம் என நான் கருதுகிறேன்.
முழு வெற்றி:
இந்தத் தீர்மானத்தை எடுத்து வருவதற்கு முன்பே, திட்டமிட்டு அவையின் நடவடிக்கைகளுக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்திலே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைக்கு அவைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணப்படியே அவைக்குக் குந்தகம் விளைவித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அவையிலே இருக்கும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் தொடர்ச்சியாகவே இப்போது வாக்கெடுப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. தி.மு.க உறுப்பினர்கள் இந்த அவையில் இருந்து, இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும், இப்போது வெளியேறிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், மற்றவர்களும் எதிர்த்து வாக்களித்திருந்தாலும், இன்றையதினம் அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்கள், தி.மு.கவை சார்ந்தவர்கள், 88 பேர்தான், மற்ற கட்சிகளை சார்ந்தவர்களை சேர்த்தாலும், இந்த நிலையில் தற்போது இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 122 உறுப்பினர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இன்றைக்கு அவர்கள் அத்தனைபேரும் இருந்து இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதாகத்தான் இருக்கும். இப்போது பதிவான இந்த வாக்குகள் நாட்டிற்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது. வாக்கெடுப்பிலே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த இந்தத் தீர்மானம் இன்றைக்கு 122 வாக்குகளைப் பெற்று முழு வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆகவே, இதன்மூலம் அறுதிபெரும்பான்மையை இந்த அரசாங்கம் பெற்றிருக்கிறது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.