செங்கோட்டையனை உசுப்பிய சசிகலா புஷ்பா: மடக்கிப் போட்ட சசிகலா உறவுகள்

ADMK, chennai, politicians, sasikala, sasikala puhpa, tamil nadu
சென்னை: புதிய பொது செயலராக போட்டியின்றி தன்னை அ.தி.மு.க., தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான தீவிர முயற்சியில், ஜெயலிதாவின் தோழி சசிகலா இறங்கி உள்ளார். அதற்கு உறுதுணையாக இருந்து, அவரது குடும்பத்தினர்களும் பாடுபட ஆரம்பித்துள்ளனர்.

கொம்பு சீவப்பட்ட செங்கோட்டையன்:

அந்த வகையில், எதிர்ப்பு கோஷ்டியினரால் கொம்பு சீவப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை முதல் கட்டமாக சரி செய்துள்ளது, சசிகலா தரப்பு. செங்கோட்டையன், சசிகலாவுக்கு எதிராக பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என தகவல் கிளம்பியதையடுத்து, அவரை, சிலர் மிரட்டிப் பார்த்துள்ளனர். அதற்கு மடங்கவில்லை என்றதும், சமாதானம் பேசியுள்ளனர், சசிகலா உறவினர்கள். சமாதானம் பேசச் சென்றவர்கள், உங்களுடைய பலம் எல்லோரும் அறிந்ததுதான். இடையில் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்துதான், ஜெயலலிதா அம்மா உங்களை, அமைச்சரவையில் இருந்து ஒதுக்கி வைத்தார். இருந்தபோதும் உங்களுக்குள்ள மக்கள் செல்வாக்கை அம்மா என்றைக்கும் மறந்தது இல்லை; அதற்காக, உங்களுக்கான வாய்ப்பை மறுத்ததும் இல்லை. அப்படித்தான், கடந்த சட்டசபை தேர்தலின் போதும் அம்மா, உங்களுக்கான வாய்ப்பை வழங்கினார். ஆக, கட்சியில் நீங்கள் எப்போதும் ஆசிர்வதிக்கப்பட்ட நபராகத்தான் இருந்துள்ளீர்கள். அம்மாவும், உடல் நிலை மோசமாவதற்கு முன், மீண்டும் உங்களை அமைச்சராக்கத்தான் திட்டம் வைத்திருந்தார். அதற்குள், அவருக்கு உடல்நிலை மோசமாகி விட்டது. அம்மாவின் கனவுகளை; லட்சியங்களை எல்லாவிதங்களிலும் நிறைவேற்றி வரும் சசிகலா, உங்களுக்கு கட்சியிலும்; ஆட்சியிலும் முக்கியப் பொறுப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, ஒரு காரியத்தை நீங்கள் செய்துவிட்டு சசிகலாவை சந்தியுங்கள் என்று சொல்லி, ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஒரு அறிக்கையை அவரிடம் கொடுத்து, அதில் கையெழுத்திட்டு, அதை வெளியிட வைத்துள்ளனர்.

அறிக்கை ஏன்:

அந்த அறிக்கையின் சாராம்சமாக, ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு விரோதமாக தான் செயல்பட மாட்டேன் என்பது போல இருந்தாலும், மறைமுகமாக, சசிகலாவுக்கு எதிர்ப்பாக நான் இருக்க மாட்டேன் என்பதுதான். இப்படி அறிக்கை வெளியிட வைத்தவர்கள், அடுத்த சில மணிகளிலேயே, செங்கோட்டையனை, போயஸ் கார்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, செங்கோட்டையனை சசிகலாவும், அவரது உறவினர்கள் சிலரும் சந்தித்துள்ளனர். அவர்கள், செங்கோட்டையன் புகழ் பாடி உள்ளனர். சசிகலாவும், முடிந்த அளவுக்கு செங்கோட்டையன் புகழ் பாடி உள்ளார். போயஸ் தோட்டத்துக்கு போய் வந்த பின், செங்கோட்டையன், சசிகலா புகழ் பாட ஆரம்பித்து விட்டதாகக் கூறுகின்றனர்.

செங்கோட்டையன் எதையும் செய்யாமல், விரக்தியில் ஒதுங்கித்தான் இருந்தார். ஆனால், செங்கோட்டையன் பெயரை குறிப்பிட்டு, அவரைப் போன்ற சீனியர்கள்தான், கட்சியின் அடுத்த பொது செயலராக வர வேண்டும் என, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா கூறியதோடு, பொது செயலர் தேர்வுக்காக, கட்சியில் முறையான தேர்தல் நடத்தப்பட வேண்டும்; அதை தேர்தல் கமிஷன் கண்காணிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார். சீனியர் தலைவர்கள் ஆதரித்தால், தானே சசிகலாவை எதிர்த்து போட்டியிடுவேன் எனவும் கூறியிருந்தார். இதையடுத்துத்தான், சசிகலா புஷ்பா பெயர் குறிப்பிட்டு கூறிய சீனியர் தலைவர்கள், தனக்கு எதிராக திரண்டு விடக்கூடாது என, ஒவ்வொருவராக, சமாதானப்படுத்தி, அவர்களை அணி திரளாமல் பார்த்துக் கொள்ளும் பணியில் படு தீவிரமாக களம் இறங்கி பாடுபட்டு வருகிறார் சசிகலா.

சசிகலா புஷ்பா கடித விபரம்:

தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு சசிகலா புஷ்பா எழுதிய கடித விவரம்;
அ.தி.மு.கவில் வலிமை வாய்ந்த பொதுச் செயலர் பதவிக்கான தேர்வு விரைவில் நடக்க இருக்கிறது. கட்சியின் விதிகளுக்குட்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறதா என்பதை, தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து, சிலர் பதவிக்கு வர நினைக்கின்றனர். தேர்தல் கமிஷனின் முழுக் கண்காணிப்பில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களைத் திரட்டி, பொதுக் குழு உறுப்பினர்களுக்கு முழு சுதந்திரம் தரும் வகையில் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.சசிகலாவுக்கு எதிராக கிளம்பிய செங்கோட்டையனை மடக்கிப் போட்டதைப் போல, எதிர் கோஷ்டியைச் சேர்ந்த தலைவர்கள் பலரையும் வரிசையாக மடக்கவும், சசிகலா தரப்பினர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். ஆனால், சசிகலாவின் இத்தனை முயற்சிகளுக்கும் எதிராக கட்சித் தொண்டர்களின் மனநிலை இருப்பதால், அவர்களையும் சமாதானப்படுத்தும் வகையில், சில திட்டங்களையும் சசிகலா உறவினர்கள் தீட்டி, அதை செயல்படுத்த தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு எதிராக சசிகலா:

கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், சசிகலா புஷ்பா இன்றளவிலும், கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளதால், பொதுக் குழு உறுப்பினராக பொதுக் குழு கூட்டம் நடத்தினால், போலீஸ் பாதுகாப்போடு கூட்டத்திற்கு வர திட்டமிட்டுள்ளார். கூடவே, சசிகலா பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடவும், கட்சியினரிடம் ஆதரவு திரட்டி வருவதால், பொதுக் குழு கூட்டத்தை சச்சரவுகள் இல்லாமல் பாதுகாப்பாக நடத்தவும், சசிகலாவும் உறவினர்களும் யோசித்து வருகின்றனர்.

English Summary:

Chennai: The new general secretary unopposed Digg itself, a serious effort to choose, jayalalithaa Shashikala’s girlfriend is down. From thereto, have started to work with his family.

Source: செங்கோட்டையனை உசுப்பிய சசிகலா புஷ்பா: மடக்கிப் போட்ட சசிகலா உறவுகள் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top