துக்ளக் இனி என்னாகும்.. நடக்குமா அந்த ஜனவரி 14 விழா?
chennai, cho ramaswamy, tamil nadu December 7, 2016,
துக்ளக்… தமிழ்ப் பத்திரிகையுலகில் இந்தப் பெயருக்கு, பத்திரிகைக்கு தனித்த இடம் உண்டு. மற்ற பத்திரிகைகளைப் போலில்லை துக்ளக். இது சோ என்ற தனி ஒரு மனிதரின் பார்வையில், அவரது கருத்தைச் சார்ந்து மட்டுமே வெளியாகும் பத்திரிகையாக இருந்தது.
அந்தப் பத்திரிகைக்கென்று ஆசிரியர் குழு, செய்தியாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் இருந்தாலும், அவை அனைத்தும் சோ என்ற ஆசிரியரின் கண்ணோட்டத்தை ஒட்டியதாகத்தான் வந்து கொண்டுள்ளன.
இந்த மாதிரி பத்திரிகைகளின் பலமும் பலவீனமும் ஆசிரியரின் அந்த ஒற்றைப் பார்வைதான். அந்த ஆசிரியர் இல்லாமல் போனால் பெரிய கேள்விக் குறியாகிவிடும் பத்திரிகையின் எதிர்காலம்.
ஆசிரியர் சோ மறைந்துவிட்ட நிலையில் துக்ளக்கும் அப்படியொரு கேள்விக்குறியுடன் நிற்கிறது. இனி பத்திரிகை வருமா? இப்போதுள்ள குழுவே நடத்தினாலும் விற்பனை எப்படி இருக்கும்? சோவுக்கு நிகராக இனி ஒரு எடிட்டர் அந்தப் பத்திரிகைக்கு வாய்ப்பாரா?
துக்ளக் ஆண்டு விழாக்கள் மிகவும் தனித்துவம் மிக்கவை. ஒவ்வொரு ஆண்டும் துக்ளக் இதழ் பிறந்த தேதியான ஜனவரி 14 அன்று, பொங்கல் நாளில் ‘துக்ளக் ஆண்டு விழா… சோ பேசுகிறார்… அனைவரும் வாருங்கள்’ என அழைப்பு வெளியாகிவிடும். எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு சம்பிரதாய அறிவிப்பாக அது வந்தாலும், துக்ளக்கின் வாசகர்கள் தவறாமல் பங்கேற்பார்கள். அந்த விழாவுக்கு பல விஐபிகளும் வருவது வழக்கம்.
இப்போதைய பிரதமர் மோடி, பாஜக தலைவர் அத்வானி, ரஜினிகாந்த் உள்பட பலரும் பல முறை இந்த விழாக்களில் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் வாசகர்கள் பேசுவார்கள் அல்லது கேள்வி எழுப்புவார்கள். சோ பதில் கூறுவார்.
இதுவரை 45 ஆண்டுகள் துக்ளக் ஆண்டு விழா சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. 2017-ம் ஆண்டு இந்த விழா நடக்குமா? இனியும் தொடருமா என்பது கேள்விகுறிதான்.
Source: துக்ளக் இனி என்னாகும்.. நடக்குமா அந்த ஜனவரி 14 விழா? – G-News
Leave a comment
You must be logged in to post a comment.