‘நாங்கள் ஏன் பதவிக்கு வரக் கூடாது?!' – தி.மு.கவுக்கு காங்கிரஸின் சவால்
Uncategorized February 2, 2017,
சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி. ‘எதிர்க்கட்சித் தலைவர்தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என எந்த விதிகளும் இல்லை. ஆட்சியில் அமராத எந்த எதிர்க்கட்சிக்கும் தலைவர் பதவியை அளிக்கலாம்' என்கின்றனர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.
தமிழக சட்டசபை கடந்த 23-ம் தேதியில் இருந்து நடைபெற்று வந்தது. இறுதிநாளான நேற்று, பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.எல்.ஏவை நியமித்ததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தது தி.மு.க. "சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பேரவையில் குழுக்கள் அமைக்கப்படுவது குறித்து அ.தி.மு.க அரசு எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதைப் பற்றி முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரடியாகச் சந்தித்து நினைவூட்டினார் செயல் தலைவர் ஸ்டாலின். ஆளுநரிடமும் புகார் மனு அளித்தார். எந்தப் பதிலும் இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். 'குழுக்கள் அமைக்கப்படும்' என தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி அளித்த உறுதிமொழியை ஏற்று வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.
நேற்று காலை சபைக்குள் வந்தபோது, பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக ராமசாமி நியமிக்கப்பட்டதை அறிந்தோம். இதைப் பற்றி அப்போதே சபாநாயகர் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். எங்களுக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் மௌனம் சாதித்தனர். பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவரைத்தான் நியமிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு துரைமுருகன் பெயரை முன்மொழிந்தார் ஸ்டாலின். அவர்களுடைய ஊழல் விவகாரங்கள் வெளியில் தெரிந்துவிடும் என்பதால்தான், காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் விரும்பாததால், பண்ருட்டி ராமச்சந்திரன் பி.ஏ.சி தலைவராக பதவி வகித்தார். தற்போது எங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பதவியை சட்டரீதியாகவே போராடி பெறுவோம்" எனக் கொதிக்கின்றனர் தி.மு.க எம்.எல்.ஏக்கள்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரிடம் பேசினோம். "பொதுக் கணக்குக் குழு தலைவர் பதவி காங்கிரஸ் பக்கம் வருவதற்கான வாய்ப்புகளை அறிந்தோம். எங்கள் கட்சியிலும் சில எம்.எல்.ஏக்கள் பி.ஏ.சி தலைவராக வருவதற்கு விரும்பினார். சட்டசபைக் கட்சித் தலைவர் என்ற முறையில் ராமசாமிக்கு அந்தப் பதவி கிடைத்தது. இந்தப் பதவியைக் கொடுத்ததற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இரண்டு கட்சிகளின் ஆட்சிகாலத்தின் கணக்கு வழக்குகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுதான் பி.ஏ.சியின் நடைமுறை. ஆட்சியில் இல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதுதான், விதிகளின்படியும் சரியானது.
அ.தி.மு.கவுக்கு முன்பு ஆட்சியில் இருந்த தி.மு.கவின் கணக்குகளும் ஆய்வுக்கு வர இருக்கின்றன. இதை உணர்ந்துதான் தி.மு.கவினர் அரசியல் செய்கிறார்கள். கடந்த ஆட்சியில் தே.மு.தி.கவுக்கு பொதுக் கணக்குக் குழு தலைவர் பதவி கொடுத்ததற்குக் காரணம், அவர்கள் ஆட்சியில் இல்லாததுதான். பிரதான எதிர்க்கட்சிக்குத்தான் பதவி வழங்க வேண்டும் என்று எந்த இடத்திலும் விதிகள் இல்லை. நேற்று காலை தி.மு.கவினர் உச்சகட்ட கொதிப்பில் இருந்தார்கள். நாங்கள் எதுவும் பேசவில்லை. சட்டசபையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தும், எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கிறோம். இதுபோன்ற பதவிகளில் நாங்கள் முன்னிறுத்துப்படுவதை தி.மு.க ஏன் எதிர்க்கிறது? காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவருக்கு எதிராக தி.மு.க நீதிமன்றம் செல்லுமா என்பதைக் கவனித்து வருகிறோம்" என்றார் நிதானமாக.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசலைக் கொண்டு வந்திருக்கிறது கணக்கு விவகாரம். தி.மு.கவின் அடுத்தகட்ட நடவடிக்கையை கவனிக்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாரம்.
-ஆ.விஜயானந்த்
Source: ‘நாங்கள் ஏன் பதவிக்கு வரக் கூடாது?!' – தி.மு.கவுக்கு காங்கிரஸின் சவால் – Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.