மாற்றத்தை கொண்டு வருமா இடைத்தேர்தல் முடிவுகள் ? தப்புமா அதிமுக ?

மாற்றத்தை கொண்டு வருமா இடைத்தேர்தல் முடிவுகள் ? தப்புமா அதிமுக ?

tami nadu

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை தெரியவர உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலில் திமுகவே அதிக இடங்களை பெற வாய்ப்பு இருப்பதாக பெருவாரியான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் தமிழக மக்கள் அனைவரும் மக்களவை தேர்தல் முடிவை காட்டிலும் அதிகம் எதிர்பார்ப்பது சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவைத்தான். ஏனென்றால் இடைத்தேர்தல் முடிவை பொறுத்தே தமிழகத்தில் அதிமுக அரசு நீடிக்குமா அல்லது கவிழுமா என்பது தெரியவரும். சரி, தமிழகத்தில் எத்தனை சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன..? அதில் தற்போது எத்தனை தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன…? ஆட்சி நீடிக்க வேண்டுமானால் எத்தனை தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என அனைத்து தரப்பு வாய்ப்புகளையும் பார்ப்போம்.

தமிழக சட்டப்பேரவையின் பலம்- 234 எம்எல்ஏக்கள்
பெரும்பான்மைக்கு தேவை- 118 எம்எல்ஏக்கள்
அதிமுக- 113 எம்எல்ஏக்கள்
திமுக கூட்டணி- 97
சுயேட்சை- 1
காலியிடங்கள்- 22
சபாநாயகர் – 1

மேலே குறிப்பிட்ட தகவலை வைத்துக் கொண்டு பார்த்தால் அதிமுக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள 5 தொகுதிகளில் வெற்றிப் பெற்றால் போதுமானது. ஆனால் தற்போது அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் ரத்தின சபாபதி, கலைசெல்வன், ஏ.பிரபு ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி சட்டப்பேரவைத் தலைவர் தனபால் மூன்று எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கில், அந்த நோட்டீஸ் மீது இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சட்டப்பேரவையில் ஒருவேளை முதலமைச்சர் பழனிசாமி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால், அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களான ரத்தின சபாபதி, கலைசெல்வன், பிரபு ஆகியோர் பழனிசாமி அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கலாம். இதுதவிர கூட்டணி கட்சியாக இருந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு, தனிமுன் அன்சாமி ஆகியோர் நிலைப்பாடும் அதிமுக அரசுக்கு இருப்பதாக வைத்துக் கொண்டால் தற்போது அதிமுக நிச்சயமாக 11 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது அவசியமாகிறது. அப்படி வெற்றி பெறும் பட்சத்தில்தான் அதிமுகவிற்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும்.

இதேநேரத்தில் மொத்தமுள்ள 22 தொகுதிகளில் திமுக 21 இடங்களில் வெற்றிப் பெற்றால் தற்போது இருக்கும் அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். 21 இடத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் திமுகவின் பலம் 118 ஆக உயரும். இதனையடுத்து திமுக ஆட்சியமைக்க ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து உரிமை கோருவார். அதனையடுத்து திமுக ஆட்சி மலரும்.

திமுகவின் பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களில் வெற்றி பெறாமல், குறைந்தது 15 இடங்களில் திமுக வெற்றி பெற்றாலும் அதிமுக அரசுக்கு சிக்கல்தான். டிடிவி தினகரன், அதிருப்தியில் இருக்கும் மூன்று அதிமுக எம்எல்ஏக்கள், இதுதவிர கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாமி ஆகியோரின் உதவியோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசை, திமுக தோற்க வைக்கலாம். இருந்தாலும் டிடிவி தினகரன், அவரை ஆதரிக்கும் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ஸ்டாலின் முதலமைச்சராவதை விரும்ப மாட்டார்கள். இதனால் மறுதேர்தலுக்கு வாய்ப்பு இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> மாற்றத்தை கொண்டு வருமா இடைத்தேர்தல் முடிவுகள் ? தப்புமா அதிமுக ?

Search

Back to Top